செய்திகள்
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ சிகிச்சை பெற்ற அறையை பார்வையிட தீபாவிற்கு அனுமதி - விசாரணை ஆணையம்
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை அறையை பார்வையிட ஜெ.தீபாவிற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. #Jayalalithaa #ApolloHospital
சென்னை:
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் ராஜன் ஹெக்டே மற்றும் நர்சு ஜோஸ்னமோல் ஜோசப் ஆகியோர் இன்று ஆஜரானார்கள். இவர்கள் இருவரும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ உதவி செய்தவர்கள்.
அவர்களிடம் ஆணைய வழக்கறிஞர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு இருவரும் பதில் அளித்தனர். இதற்கிடையில் அப்பல்லோ மருத்துவமனை ஆய்வின்போது தன்னையும் அனுமதிக்க வேண்டும் என்று ஜெ.தீபா தாக்கல் செய்த மனுமீது விசாரணை நடந்தது.
அப்போது ஜெ.தீபா மற்றும் அவரது வக்கீல் ஆய்வில் பங்கேற்பதற்கு ஆணையம் மற்றும் அப்பல்லோ தரப்பு வக்கீல்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதையடுத்து ஜெ.தீபா சார்பில் ஆஜராக வக்கீல் தொண்டன் சுப்பிரமணி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
ஆய்வின்போது தனது ஆதரவாளர்கள் வந்தாலும் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி கட்டுப்பாட்டுடன் நடப்பார்கள். எந்த தவறும் நடக்காது என்று அதில் கூறி இருந்தார்.
ஜெ.தீபாவின் உறுதி மொழியை ஏற்று அப்பல்லோ மருத்துவமனை ஆய்வில் ஜெ.தீபா மற்றும் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி பங்கேற்க நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முதலில் அனுமதி வழங்கியது.
பின்னர், அப்பல்லோ மருத்துவமனை ஆய்வில் பங்கேற்க தீபாவிற்கு அனுமதி இல்லை என்றும், ஆனால் வரும் 29-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஆணையம் ஆய்வு செய்யும் போது ஜெ சிகிச்சை பெற்ற அறையை இரவு 8.15 மணி முதல் 8.40 வரை தீபா பார்வையிட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. #Jayalalithaa #Deepa #inquiryCommission #ApolloHospital