செய்திகள்

மாமல்லபுரத்தில் நள்ளிரவில் பலத்த மழை - கடல் சீற்றம்

Published On 2018-07-27 12:57 IST   |   Update On 2018-07-27 12:57:00 IST
மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இன்று கடல் சீற்றம் காரணமாக அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மாமல்லபுரம்:

மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. கடல் அலை சீற்றத்துடன் பல அடி உயரத்துக்கு எழுந்தது.

இதனால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடும் இடமான மாமல்லபுரம் கடற்கரை கோவில் வட புறமும், தென்புறமும் கடல் நீர் புகுந்தது.

மீனவர்கள் அங்கு நிறுத்தி இருந்த படகுகளையும் மற்றும் மீன்பிடி வலைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து சென்றனர். இன்று காலையும் கடல் அலை சீற்றத்துடன் காணப்பட்டது.

சுற்றுலா பயணிகள் கடலின் சீற்றத்தை பார்த்து பயந்து அருகே செல்லாமல் தூரத்தில் இருந்தே பார்த்து ரசித்தனர்.

கடல் சீற்றம் காரணமாக மாமல்லபுரம், தேவநேரி, நெம்மேலி, சூலேரிக்காடு, வெண்புரு‌ஷம், கொக்கில மேடு பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

பலத்த மழை காரணமாக மாமல்லபுரம் கீழராஜவீதி, ஒத்தவாடைதெரு, கலங்கரை விளக்கம் ரோடு போன்ற முக்கிய வீதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

திருக்கழுகுன்றம் சாலையில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கடம்பாடி, குழிப்பாந்தண்டலம், எச்சூர், பெருமாள் ஏரி, மணமை பகுதியில் வாழை மரங்கள் காற்றில் சாய்ந்தன.

Tags:    

Similar News