செய்திகள்

செங்கல்பட்டில் இன்று காலை ரவுடி வெட்டிக் கொலை

Published On 2018-07-24 09:08 GMT   |   Update On 2018-07-24 09:08 GMT
செங்கல்பட்டில் இன்று காலை ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Murdercase

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு டவுன், நாவலர் நெடுஞ்செழியன் தெரு, மலைப்பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் சீனு என்கிற குள்ளசீனு (வயது40). ரவுடி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இன்று காலை சீனு வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்றார். சிறிது தூரம் சென்ற போது 5 பேர் கும்பல் திடீரென அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர்.

அதிர்ச்சி அடைந்த சீனு அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓட முயன்றார். ஆனாலும் சுற்றி வளைத்த கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த சீனு சம்பவ இடத்திலேயே பலியானார். குடியிருப்புக்கு மத்தியில் நடந்த இந்த சம்பவம் கண்டு அங்கு இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கொலை திட்டத்தை முடித்த கும்பல் சர்வ சாதாரணமாக அருகில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டனர்.

சீனு கொலை செய்யப்பட்டது பற்றி அறிந்ததும் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறியபடி அங்கு வந்தனர். செங்கல்பட்டு டவுன் போலீசார் சீனு உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கொலையுண்ட சீனு மீது செங்கல்பட்டு அ.தி.மு.க. நகர செயலாளர் குமார் கொலை வழக்கு, பிரபல ரவுடி பட்டரைபாக்கம் சிவாவை கொலை செய்ய முயன்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று தெரிகிறது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #Murdercase

Tags:    

Similar News