செய்திகள்

சத்துவாச்சாரியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை

Published On 2018-07-18 10:23 GMT   |   Update On 2018-07-18 10:23 GMT
சத்துவாச்சாரியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-5, 6-வது தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 31). சென்னை ஆவடியில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி ரேகா ஒரு பெண் குழந்தை உள்ளது. தம்பதி நேற்று இரவு 10 மணி காட்சி சினிமா பார்க்க சென்றனர். இதனை நோட்ட மிட்ட வாலிபர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அங்கு 2 பீரோக்களில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்களை மூட்டை கட்டிக் கொண்டு வெளியேறினான். அந்த நேரத்தில் சினிமாவுக்கு சென்றிருந்த பாபு. அவரது மனைவி குழந்தையுடன் வீட்டுக்கு வந்தனர்.

அவர்களை கண்டதும் வாலிபர் வேகமாக ஓடினான். இதனை கண்டு திடுக்கிட்ட பாபு கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் விரட்டி சென்றனர். ஆனால் கொள்ளையன் நகையுடன் தப்பி ஓடிவிட்டான்.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

வீட்டில் இருந்து ஓடிய கொள்ளையன் அரைக்கால் டவுசர் மற்றும் முகமூடி அணிந்து வந்ததாக கூறினர். கொள்ளை நடந்த வீட்டில் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சத்துவாச்சாரியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News