செய்திகள்
போதையில் மயங்கி கிடந்த பெண்ணையும், பாதுகாப்பு கருதி போக்குவரத்து போலீசார் டிவைடரை தள்ளி வைத்திருப்பதை காணலாம்

குடிமகனுக்கு சவால் விட்ட குடிமகள்- போதையில் ரோட்டில் கிடந்தவரை காப்பாற்றிய போலீசார்

Published On 2018-07-16 10:23 GMT   |   Update On 2018-07-16 17:31 GMT
பவானியில் பெண் ஒருவர் போதையில் ரோட்டில் விழுந்து கிடந்தார். அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பவானி:

டாஸ்மாக் மதுக்கடையில் போதை ஏற்றி வரும் குடிமகன்களில் சிலர் தெருக்கள் மற்றும் ரோடுகளில் மயங்கி கிடக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

பவானியிலும் இந்த அவலம் நீடிக்கிறது. இதில் இன்னொரு அவல நிலை என்னவென்றால் ‘‘குடிமகன்’’களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என கூறும் வகையில் சில பெண்களும் ஆங்காங்கே விழுந்து கிடக்கும் அவலமும் அரங்கேறி கொண்டிருக்கிறது.

பவானி அந்தியூர் பிரிவில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் போதையில் ரோட்டில் விழுந்து கிடந்தார். அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

‘‘என்ன கொடுமை சார் இது’’ என சிலர் தலையில் அடித்தப்படி சென்றனர். ‘‘கலி காலம் முத்தி போச்சு’’ என்றனர் சிலர்.

வாகனம் ஏதும் அந்த பெண் மீது ஏறிவிடக்கூடாது என பலர் துடித்தனர். போக்குவரத்து போலீசாரும் அங்கு வந்தனர். அந்த பெண்ணை எழுப்ப முயன்றும் மயக்கம் தெளியாமல்அந்த பெண் ரோட்டிலேயே கிடந்தார்.

இதனால் இரக்கப்பட்ட போலீசார் அந்த பெண் மீது வாகனம் மோதாமல் இருக்க அருகே டிவைடரை தள்ளி கொண்டு அந்த பெண் அருகே வைத்தனர். இதனால் அந்த பெண் உயிர் தப்பினார்.

நீண்ட நேரம் கழித்து அந்த குடிமகளுக்கு மயக்கம் தெளிந்தது. எழுந்த அந்த பெண் ரோட்டிலா இவ்வளவு நேரம் விழுந்து கிடந்தோம்... என்று நினைத்தப்படி வேகமாக நடையை கட்டினார்.

அந்த பெண் மறையும் வரை வியப்புடன் வேடிக்கை பார்த்தனர் பவானி நகர மக்கள்.
Tags:    

Similar News