செய்திகள்

மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற அகதிகள் 3 பேர் கைது

Published On 2018-07-14 23:19 GMT   |   Update On 2018-07-14 23:19 GMT
மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற அகதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பனைக்குளம்:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சிலர் கள்ளத்தனமாக படகு மூலம் தப்பி செல்ல இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் மண்டபம் கடற்கரை பகுதியை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அய்யனார் கோவில் கடற்கரை அருகே 3 பேர் படகில் ஏறுவதற்காக வந்து கொண்டிருந்தனர். கியூ பிரிவு போலீசார் அந்த 3 பேரையும் மடக்கி பிடித்து தீவிரமாக விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி முகாமை சேர்ந்த ராஜன் (வயது 33), அவருடைய மனைவி ரூபா என்கிற அனு (22), மண்டபம் முகாமை சேர்ந்த நிஷாந்தன் (26) என்று தெரிய வந்தது.

இவர்களில் ராஜன் தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் நடந்துள்ள திருட்டு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி என்பதும், இவர் திருடி கொண்டு வரும் நகைகளை அடகு வைத்து பணம் பெற்று கொடுப்பது ரூபா என்றும் கூறப்படுகிறது. நிஷாந்தன் மீது ராமநாதபுரம் பகுதியில் நகை திருடியதாக வழக்கு உள்ளது தெரிய வந்துள்ளது.

திருட்டு சம்பந்தப்பட்ட பல வழக்குகள் உள்ளதால் போலீசாருக்கு பயந்தே 3 பேரும் கள்ளத்தனமாக படகில் இலங்கைக்கு தப்பிச் செல்ல திட்டம் தீட்டி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, 3 பேரையும் கைது செய்த கியூ பிரிவு போலீசார், அவர்களை இலங்கைக்கு அழைத்துச் செல்ல முயன்ற ஏஜெண்டு யார் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News