செய்திகள் (Tamil News)

என்ஜினில் திடீர் கோளாறு: ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதம்

Published On 2018-07-13 05:00 GMT   |   Update On 2018-07-13 05:00 GMT
தேவகோட்டை அருகே என்ஜினில் திடீர் கோளாறால் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதமாக சென்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

தேவகோட்டை:

சென்னையில் இருந்து நேற்று மாலை 5.50 மணிக்கு பயணிகளுடன் எக்ஸ்பிரஸ் ரெயில் ராமேசுவரத்துக்கு புறப்பட்டது.

தஞ்சாவூர்,காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக செல்லும் இந்த ரெயில் ராமேசுவரத்திற்கு அதிகாலை சென்றடையும்.

சிவகங்கை மாவட்டம், கல்லல் ரெயில் நிலையத்துக்கு நேற்று நள்ளிரவு 1.40 மணிக்கு ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அங்கு பயணிகள் ஏறியவுடன் டிரைவர் ரெயிலை இயக்க முற்பட்டார்.

அப்போது என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. உடனே ரெயில்வே ஊழியர்கள் அதனை சரி செய்ய முயன்றனர். பலமணி நேரம் போராடியும் பழுதை சரி செய்ய முடியவில்லை.

இதையடுத்து காரைக்குடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து தொழில் நுட்ப ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் போராடியும் எந்தவித பலனும் இல்லை.

இந்த நிலையில் காரைக்குடிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் வந்தது. அந்த ரெயில் என்ஜினை கல்லலுக்கு கொண்டு சென்று ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொருத்தப்பட்டது. பின்னர் அந்த ரெயில் 4.40 மணியளவில் ராமேசுவரத்திற்கு புறப்பட்டது. காலை 7.10 மணி அளவில் ராமேசுவரம் சென்றடைந்தது.

என்ஜின் கோளாறால் 3 மணி நேரம் தாமதமாக சென்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

Tags:    

Similar News