செய்திகள்

சத்தியமங்கலம் அருகே சாயப்பட்டரை உரிமையாளர் உள்பட 2 பேர் பலி

Published On 2018-07-09 05:23 GMT   |   Update On 2018-07-09 05:23 GMT
சத்தியமங்கலம் அருகே சாயப்பட்டரை உரிமையாளர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 31). சாயப்பட்டறை உரிமையாளர். இவரிடம் வேலை பார்த்தவர் முருகேசன் (31). இவர்கள் 2 பேரும் மேலும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (40), விஜயகுமார் (31), நிஷாந்த் (23) என 5 பேரும் ஒரு காரில் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி கோவிலில் நடந்த ஒருதிருமண விழாவில் பங்கேற்க சென்றனர்.

திருமண விழா முடிந்த பிறகு அதே காரில் அவர்கள் நேற்று இரவு 10.30 மணியளவில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் வந்த கார் சத்தியமங்கலம் அருகே முருகன்மேடு என்ற இடத்தில் ஒரு வளைவில் திரும்பிய போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரின் உள்ளே இருந்தவர்கள் இடிபாட்டுக்குள் சிக்கி கூக்குரலிட்டனர். இந்த விபத்தில் சாயப்பட்டரை உரிமையாளர் சரவணகுமார் மற்றும் முருகேசன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த மற்ற 4 பேரும் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் பலியான 2 பேருக்கும் திருமணமாகி ஒரு மகன் உள்ளனர்.

இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News