அரியலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் - முதியவர்-மருத்துவமனை ஊழியர் பலி
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கீழப்பளூர் வாளகுடியை சேர்ந்தவர் தனபால் (வயது 61). இவரது மனைவி பானுமதி. இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இன்று காலை ஏலாக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். சத்திரத்து ஏரி - ஆண்டவர் கோவில் இடையே செல்லும் போது ஏலாக்குறிச்சி தனியார் மருத்துவமனை ஊழியர் ஞானபிரகாசம் (55) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், தனபால் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இதில் தனபால், ஞானபிரகாசம் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் திருமானூர் போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த பானுமதி சிகிச்சைக்காக தஞ்சைஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து திருமானூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.