புதுவை ரெயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் திடீர் மரணம்
புதுச்சேரி:
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்நேத்தன், (வயது23). இவர் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தனியார் டயர் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் புதுவையில் இருந்து செல்லும் ரெயில் மூலம் சொந்த ஊருக்கு செல்வதற்காக இன்று காலை புதுவை ரெயில் நிலையத்துக்கு வந்தார். டயர் கம்பெனியின் சூப்பர்வைசர் வினோத் அவரை காரில் அழைத்து வந்திருந்தார்.
ரெயில் நிலையத்தில் இருந்த அஜய்நேத்தன் திடீர் என மயங்கி விழுந்தார். அவருடன் கூட வந்தவர்கள் அஜய்நேத்தனை மீட்டு அவர்கள் வந்த காரிலேயே ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அஜய்நேத்தன் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.