செய்திகள்

பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து 5 நாட்களாக வீணாகி ஓடும் குடிநீர்

Published On 2018-06-03 17:39 GMT   |   Update On 2018-06-03 17:39 GMT
பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த 5 நாட்களாக தண்ணீர் வீணாகி ஓடுகிறது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
பரமக்குடி:

பரமக்குடி பகுதி ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து 5 நாட்களாக குடிநீர் வீணாகிறது. இரவு-பகலாக குழாயில் இருந்து வெளியேறும் குடிநீரால் அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கிறது.

பஸ், லாரி உள்பட கனரக வாகனங்கள் செல்லும் போது சாலையில் கிடக்கும் தண்ணீர் சிதறி நடந்து செல்பவர்களின் மீது பட்டு அவர்களின் ஆடைகள் அசுத்தம் அடைகின்றன. அப்பகுதியிலேயே அரசு ஐ.டி.ஐ., பொதுப்பணித்துறை அலுவலகம் ஆகியவையும் உள்ளன. எத்தனையோ அதிகாரிகள் அந்த சாலையின் வழியாக சென்று வருகின்றனர். ஆனால் குழாய் உடைந்து 5 நாட்களாக வீணாகி ஓடும் குடிநீரை தடுக்க யாரும் நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரியதாகும். பல பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சாலை மறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கு குடிநீர் வீணாகி வருகிறது என்பதை அறிந்து பொதுமக்கள் அதிருப்தி அடைந்துஉள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News