செய்திகள்

திருவாண்டார்கோவிலில் ஆன்லைன் லாட்டரி விற்ற 3 பேர் கைது

Published On 2018-05-25 19:32 IST   |   Update On 2018-05-25 19:32:00 IST
திருவாண்டார்கோவில் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஆன்லைன் லாட்டரி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருபுவனை:

திருபுவனை பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி மற்றும் 3 நம்பர் லாட்டரிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் லாட்டரி சீட்டுகள் விற்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க திருபுவனை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் லாட்டரி சீட்டு விற்பவர்களை கண்காணிக்க சப்-இன்ஸ்பெக்டர் பிரியா தலைமையில் ஒரு தனிப்படை அமைத்தார். அவர்கள் திருபுவனை மற்றும் திருவாண்டார் கோவில் பகுதிகளில் கண்காணித்து வந்தனர்.

நேற்று திருவாண்டார் கோவில் மார்க்கெட் பகுதியில் போலீஸ்காரர்கள் பார்த்தசாரதி, மலைராஜா ஆகியோர் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு 3 பேர் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருவாண்டார் கோவில் பகுதியை சேர்ந்த தண்டபாணி (வயது 36), நடராஜன் (33), விழுப்புரத்தை சேர்ந்த மோகன்ராஜ் (40) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் ஆன் லைனில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், ரூ.8 ஆயிரத்து 100 ரொக்க பணம் மற்றும் லாட்டரி சீட்டு விற்க பயன்படுத்திய நோட்டுகளும், லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News