செய்திகள்

நீலாங்கரையில் போலீஸ் நிலையத்தில் கைதி திடீர் மரணம்

Published On 2018-05-18 09:52 GMT   |   Update On 2018-05-18 09:51 GMT
நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவான்மியூர்:

துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் அந்தோணி (வயது28).

இவர் மீது துரைப்பாக்கம், நீலாங்கரை, செம்மஞ்சேரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, வீட்டு பூட்டை உடைத்து கொள்ளை ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மற்றும் போலீசார் தேடப்பட்டு வந்த அந்தோணியை பிடித்தனர். அவரை விசாரணை செய்வதற்காக நீலாங்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு திடீரென்று அந்தோணி மயங்கி விழுந்ததாக தெரிகிறது. உடனே அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்தோணி உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

அந்தோணி இறந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இன்று அவர்கள் நீலாங்கரை போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட முயற்சித்தனர்.

இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் நீலாங்கரை போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர். முற்றுகையிட வந்த அந்தோணி உறவினர்களை தடுத்து நிறுத்தி கலைந்து போகச் செய்தனர்.

அந்தோணியை போலீசார் பிடித்தபோது அவர் தப்பித்து ஓடி கீழே விழுந்து காயம் அடைந்ததில் இறந்தாரா? அல்லது போலீசார் தாக்கியதில் இறந்தாரா? என்பது மர்மமாக உள்ளது.

இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், “நேற்று இரவு வீட்டில் இருந்த அந்தோணியை போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்று அழைத்துச் சென்றனர். அவரை போலீசார் பலமாக தாக்கி உள்ளனர். இதனால் அவர் இறந்துள்ளார்” என்று குற்றம் சாட்டினார்கள். #Tamilnews
Tags:    

Similar News