செய்திகள்

சென்னையில் எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வாலிபர் கைது

Published On 2018-05-05 18:47 GMT   |   Update On 2018-05-05 18:47 GMT
சென்னையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடு மற்றும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். #EdappadiPalaniswami #ActorRajinikanth #BombThreat
சென்னை:

சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் 2 மணியில் இருந்து ஒரே செல்போன் எண்ணில் இருந்து பல முறை அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர் முதலில் சென்னை அடையாறு கிரின்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். பின்னர், போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் முக்கிய பிரமுகர்கள் வீடுகளிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். நான் சென்னையில் தான் இருக்கிறேன். கருப்புச்சட்டை அணிந்து இருக்கிறேன். முடிந்தால் என்னை தேடி பிடித்து கைது செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் போலீஸ் உயரதிகாரிகளும், போலீசாரும் உடனடியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த் வீடுகளுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

வெடிகுண்டு நிபுணர்களும், போலீஸ் மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர். அந்த செல்போன் முகவரி கடலூரை சேர்ந்த பிரதீப் என்பவருடையது என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் எண்ணை வைத்து விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு குப்பம் என்ற இடத்தை சேர்ந்த புவனேஷ் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், புவனேஷ் தனது உறவினர் பிரதீப் என்பவரது செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்து வந்ததும், பின்னர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புவனேஷ் ஏற்கனவே புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, அதனைத் தொடர்ந்து போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.  #EdappadiPalaniswami #ActorRajinikanth #BombThreat #tamilnews
Tags:    

Similar News