செய்திகள்

தா.பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-05-04 19:56 IST   |   Update On 2018-05-04 19:56:00 IST
தா.பேட்டை அருகே வீட்டின் மேற்கூரையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை போலீசுக்கு தெரியாமல் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தா.பேட்டை:

திருச்சி மாவட்டம் தா. பேட்டை சக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திவாகர் (வயது 27), கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ (22).  இருவரும் கடந்த  2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. 

இவர்கள் வளையடுப்பு கிராமத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். திவாகருக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. இது தொடர்பாக கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் திவாகர் நேற்று வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு குடித்து விட்டு வந்தார். அப்போதும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சுபஸ்ரீ வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் மேற்கூரையில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே வீட்டில்  இருந்து வெளியே சென்றிருந்த திவாகர், சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த போது மனைவி சுபஸ்ரீ தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதையடுத்து திவாகர் மற்றும் அவரது உறவினர்கள் சுபஸ்ரீயின் உடலை போலீசுக்கு தெரியாமல் சக்கப்பட்டியில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதையறிந்த தா.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது  வளையடுப்பு கிராமம் ஜம்புநாதம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் அங்குள்ள போலீசாருக்கு தகவல் அளித்தனர். 
இதைத்தொடர்ந்து  ஜம்புநாதம் போலீசார் சென்று, சுபஸ்ரீயின் உடலை கைப்பற்றி துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்தனர். 

மேலும் குடும்ப தகராறில் சுபஸ்ரீ தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 வருடங்களே ஆவதால் முசிறி கோட்டாட்சியர் ராஜ்குமாரும் விசாரணை நடத்தி வருகிறார். 

Similar News