இன்று ஈஸ்டர் பண்டிகை- கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ஈரோடு:
பிப்ரவரி 14-ந் தேதி கிறிஸ்தவர்களால் சாம்பல் புதன் கடைப் பிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவகாலம் மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து கடந்த 25-ந் தேதி குறுதோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து பெரிய வியாழன், புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இயேசு பிரான் கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள்.
இதையொட்டி இன்று நள்ளிரவில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைனகளும், ஆராதனைகளும் நடந்தது.
ஈரோடு ஸ்டேட் பேங்க் ரோட்டில் உள்ள புகழ் பெற்ற புனித அமல அன்னை ஆலயத்தில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பிராத்தனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இயேசு பிரான் கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்த காட்சிகள் தத்ரூபமாக வைக்கப்பட்டுள்ளது. இதில் பங்கு தந்தை அருண், உதவி பங்கு தந்தை சிஜீ, அருள் தந்தை ஜான் கெனடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று பிரப் ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ.ஆலயம், ஈரோடு ரெயில்வே காலனியில் உள்ள ஆலயம், அக்ரஹாரத்தில் உள்ள லூர்து மாதா ஆலயம் மேலும் கோபி, சத்தி, அந்தியூர், பவானி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிராத்தனை நடந்தது.