செய்திகள்

வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பலி

Published On 2018-02-07 17:24 IST   |   Update On 2018-02-07 17:24:00 IST
வேப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

வேப்பூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கொடுக்கூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 24). இவரது உறவினர் ஆசை (20). இவர்கள் 2 பேரும் நேற்று கேமரா வாங்குவதற்காக வேப்பூர் அருகே உள்ள நல்லூர் பகுதிக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

நல்லூர் பகுதியில் கேமரா வாங்கிக் கொண்டு நேற்று இரவு 10 மணிக்கு அவர்கள் சொந்த ஊரான கொடுக்கூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மேமாத்தூர் அணைக்கட்டு அருகே உள்ள சாலையோரவளை வில் மோட்டார் சைக்கிள் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ், ஆசை 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து குறித்து அந்த பகுதி பொதுமக்கள் வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த சந்தோஷ், ஆசை ஆகிய 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Similar News