பண்ருட்டியில் இன்று ஓடும் பஸ்சில் திடீர் தீ விபத்து: 25 பயணிகள் உயிர் தப்பினர்
பண்ருட்டி:
பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து புதுப்பேட்டைக்கு இன்று மதியம் 11.50 மணிக்கு தனியார் மினிபஸ் புறப்பட்டது. அதில் 25 பயணிகள் பயணம் செய்தனர். மினிபஸ்சை ஒறையூரை சேர்ந்த சந்திரகாசன் (வயது 30) ஓட்டினார்.
அந்த மினிபஸ் இந்திராகாந்தி சாலை வழியாக லிங்க் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது மினிபஸ்சின் அடியில் திடீரென தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென பஸ்சுக்கு அடியில் எரிந்து கொண்டிருந்தது. அதில் இருந்து வெளியே புகை வந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த பயணிகள் கூச்சலிட்டனர். உடனடியாக சந்திரகாசன் மினிபஸ்சை அதே இடத்தில் நிறுத்தினார். இதையடுத்து மினிபஸ்சில் இருந்த 25 பயணிகளும் கீழே இறங்கி ஓடினர்.
இதுப்பற்றி பண்ருட்டி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி பண்ருட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சண்முகம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மினி பஸ்சின் அடியில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் மினிபஸ்சின் அடியில் இருந்த மோட்டார் முழுவதும் எரிந்து நாசமானது. பயணிகள் 25 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓடும் பஸ்சில் தீ பிடித்த சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews