செய்திகள்

ஈரோட்டில் சாயப்பட்டறை தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை

Published On 2017-12-28 16:21 IST   |   Update On 2017-12-28 16:21:00 IST
ஈரோட்டில் சாயப்பட்டறை தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கத்துவார் என்ற பகுதியை சேர்ந்தவர் ராஜ் (வயது 27).

இவர் ஈரோடு, சூளை பாவாயி தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாயப்பட்டறையில் வேலை பார்த்தார்.இதற்காக அருகில் உள்ள அறையில் அவர் தங்கி இருந்தார்.

அங்கு 2 அறைகள் உள்ளன. ஒரு அறையில் ராஜ், ஒரு பெண், ஒரு குழந்தை, இன்னொரு வாலிபர் ஆகியோர் இருந்தனர். மற்றொரு அறையில் சாயப்பட்டறைகளில் வேலை பார்க்கும் சில வாலிபர்கள் தங்கி இருந்தனர்.

கடந்த புதன்கிழமை முதல் ராஜ் தங்கியிருந்த அறை பூட்டி கிடந்தது. இன்று காலையும் அறை திறக்கப்படவில்லை. அறையில் இருந்து துர்நாற்றமும் வீசியது. இதனால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனவே அவர்கள் இது தொடர்பாக வீரப்பன் சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ராஜ் தங்கி இருந்த அறை கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு ராஜ் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலை துண்டாகும் அளவுக்கு கழுத்து அறுக்கப் பட்டிருந்தது. இன்னும் கொஞ்சம் அறுத்திருந்தால் தலை துண்டாகி இருக்கும்.

அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை நடந்தது? என்பதை கண்டறிய போலீசார் துரித நடவடிக்கையில் இறங்கினர்.

சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வைதேகி வரவழைக்கப்பட்டது. அது ராஜின் பிணத்தை மோப்பம் பிடித்தது. பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு வந்தது.

அங்கு வட்டமிட்டது. பின்னர் 2 கி.மீ. தொலைவில் உள்ள செங்குந்தர் நகருக்கு ஓடியது. அங்குள்ள சாயப்பட்டறைக்குள் நுழைந்த மோப்ப நாய் அங்கு வட்டமிட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

எனவே மோப்ப நாயை மீண்டும் கொலை நடந்த இடத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு ராஜின் பிணத்தை மோப்ப நாய் நன்றாக மோப்பம் பிடிக்க வைத்தனர்.

மோப்பம் பிடித்த நாய் அங்கிருந்து முன்பு போல பஸ் நிறுத்தத்துக்கு வந்து வட்டமிட்டு பின்னர் செங்குந்தர் நகர் சாயப்பட்டறைக்கு ஓடியது. அருகில் உள்ள இன்னொரு சாயப்பட்டறை பகுதியிலும் வட்டமிட்டது.

எனவே கொலையாளி அந்த சாயப்பட்டறைகளில் வேலை பார்ப்பவராக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. எனவே அந்த 2 சாயப்பட்டறைகளிலும் பணிபுரியும் பெண்கள் உள்பட 10 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜ் உடன் அறையில் பெண் யார்? வாலிபர் யார்? குழந்தை யாருடையது? என்பது தெரியவில்லை. கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு காரணமா? என்பதும் தெரியவில்லை.

இது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஈரோட்டில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News