செய்திகள்

வேப்பூர் அருகே கோவிலில் பூசாரியை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை

Published On 2017-12-08 10:41 IST   |   Update On 2017-12-08 10:41:00 IST
வேப்பூர் அருகே கோவிலில் பூசாரியை கட்டிப்போட்டு ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
வேப்பூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்துள்ள ஆதியூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துலிங்கம் (வயது 47). இவர் காட்டுமயிலூர் கிராமம் அருகே கருப்பசாமி கோவில் கட்டி பூஜை செய்து வருகிறார்.

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முத்துலிங்கம் குறி சொல்லி வந்தார். அவருக்கு பக்தர்கள் காணிக்கையாக பணமும், நகையும் வழங்கி வந்தனர். நேற்று இரவு முத்துலிங்கம் கோவிலில் பக்தர்களுக்கு குறி சொன்னார்.

இரவு 10 மணி அளவில் பக்தர்கள் அனைவரும் சென்று விட்டனர். முத்துலிங்கம் மட்டும் தனியாக இருந்தார். அப்போது 10 பேர் கொண்ட மர்ம மனிதர்கள் கோவிலுக்குள் திடீரென்று புகுந்தனர். அவர்கள் முத்துலிங்கத்தை சரமாரியாக தாக்கினர். பின்னர் அங்கிருந்த தூணில் அவரை கட்டி வைத்தனர்.

அவர் வைத்திருந்த ரூ.3 லட்சம் ரொக்க பணம் மற்றும் 17 பவுன் நகைகளையும் மர்ம மனிதர்கள் கொள்ளையடித்தனர். மேலும் கோவிலின் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலையும் தூக்கி கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

இன்று காலை வழக்கம்போல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் முத்துலிங்கம் தூணில் கட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கொள்ளையர்கள் தாக்கியதில் முத்துலிங்கம் காயம் அடைந்திருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News