செய்திகள்

விருத்தாசலத்தில் ரெயில்வே ஊழியர் வீட்டில் ரூ.75 ஆயிரம் கொள்ளை

Published On 2017-12-06 11:04 GMT   |   Update On 2017-12-06 11:05 GMT
விருத்தாசலத்தில் ரெயில்வே ஊழியர் வீட்டில் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.75 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரெயில்வே குடியிருப்பில் வசிப்பவர் சசிக்குமார் (வயது29). இவர் விருத்தாசலம் ரெயில்வே நிலையத்தில் பொறியியல்துறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 3-ந்தேதி சசிக்குமார் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான சேலத்துக்கு சென்று இருந்தார். இதை அறிந்த மர்ம மனிதன் இரவில் சசிக்குமார் வீட்டின் ஓட்டைபிரித்து உள்ளே புகுந்தான்.

பின்னர் அவன் அங்கு இருந்த பீரோவைஉடைத்து அதில் இருந்த ரூ.75 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு சென்று விட்டான். நேற்று இரவு 11 மணிஅளவில் சசிக்குமார் வீட்டுக்குவந்து கதவைதிறந்து உள்ளே சென்றார்.

அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. இதைப்பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பீரோவை பார்த்தபோது உள்ளே இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அவர் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், குற்றவியல் சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொள்ளையில் துப்புதுலக்க விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதனை போலீசார் தேடி வருகிறார்கள்.

விருத்தாசலம் ரெயில்வே குடியிருப்பு பகுதியில் கடந்த மாதம் 3 வீடுகளில் மர்ம மனிதர்கள் பூட்டுகளை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்து சென்றனர். தற்போது மீண்டும் அங்கு கொள்ளை சம்பவம் நடந்து இருப்பதால் அங்குள்ள மக்கள் பீதியில் உள்ளனர்.

Tags:    

Similar News