செய்திகள்

கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2017-11-27 16:27 IST   |   Update On 2017-11-27 16:28:00 IST
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடலூர்:

தெற்கு வங்கக்கடலையொட்டியுள்ள இலங்கை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது.

கடலூரில் நேற்று லேசான மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் விடிய விடிய சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலை 7.30 மணிக்கு திடீரென்று பலத்த மழை கொட்டியது. பின்னர் தொடர்ந்து விட்டு விட்டு மழை தூறி கொண்டே இருந்தது.

கடலூர் முதுநகர், திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், புதுபாளையம், பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், காரா மணிக்குப்பம், கூத்தப்பாக்கம், திருவந்திபுரம், முதுநகர், நெல்லிக்குப்பம் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சாலையோரங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது.

இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். சிலர் குடைகளை பிடித்தபடியும், நனைந்த படியும் பணிகளுக்கு சென்றதை காண முடிந்தது.

பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் பெரிதும் பாதிப்படைந்தனர். ஒரு சில வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன.

இன்று காலை வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. காற்றின் வேகம் தொடர்ந்து அதிக மாகவே இருந்தது.

கடலூர் தேவனாம்பட்டினத்தில் இன்று காலை அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. 5 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. அந்த அலைகள் கடலில் இருந்து கரை வரை வந்து தொட்டு தொட்டு சென்றன. இதனால் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டது.

கடற்கரைக்கு வந்தவர்களை கடலில் இறங்க போலீசார் அனுமதிக்கவில்லை. அவர்கள் கரையோரம் இருந்தே கடலை பார்த்து ரசித்தனர். கடல் சீற்றம் காரணமாக தாழங்குடா பகுதியில் மீனவர்கள் பெரும்பாலானோர் இன்று 2-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதனால் படகுகள் கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடலூரில் பெய்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு குண்டும்-குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். வாகனங்களில் சென்ற சிலர் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

இதேபோல் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் நேற்று இரவு முதலே லேசான மழை பெய்து கொண்டு இருந்தது. இரவு முழுவதும் இந்த மழை நீடித்தது.அதிகாலை 3 மணிக்கு மழையின் வேகம் அதிகரித்தது ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடித்து ஒடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. இன்று காலையும் தொடர்ந்து மழை தூறி கொண்டே இருந்தது.

நெய்வேலி பகுதியில் நேற்று மாலை முதல் இன்று காலை வரைதொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அதன் சுற்று வட்டார பகுதிகளான டவுண்ஷிப், செடுத்தான் குப்பம், வடகக்குத்து, புது நகர், மந்தாரக்குப்பம், தண்டவன்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நின்றது.

பண்ருட்டி, விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதலே லேசான மழை பெய்தது. தொடர்ந்து மழை தூறி கொண்டே இருக்கிறது.

மாவட்டத்தில் மரக்காணம், திண்டிவனம், செஞ்சி, உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், கள்ளக்குறிச்சி உள்பட பல இடங்களிலும் மழை பெய்தது.

மரக்காணத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Similar News