செய்திகள்

கடலூர்-விழுப்புரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை: மின்னல் தாக்கி 4 பெண்கள் காயம்

Published On 2017-10-28 17:26 IST   |   Update On 2017-10-28 17:26:00 IST
கடலூர் மற்றும் விழுப்புரத்தில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த 4 பெண்கள் மீது மின்னல் தாக்கியதில் காயம் அடைந்தனர்.
கடலூர்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த ஆண்டு வழகத்தைவிட வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து கடலூரில் நேற்று மதியம் 2 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டதால் சிறிது நேரத்தில் மழை பெய்யத்தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் வரை மிதமான மழை பெய்தது. நேற்று நள்ளிரவு முதல் இடி-மின்னல் மற்றும் காற்றுடன் மழை பெய்தது. அதிகாலை வரை மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.

இதனால் கடலூரில் சுரங்கப்பாதையிலும், பஸ் நிலையத்திலும், சாலையிலும், தாழ்வான இடங்களிலும் மழைநீர் தேங்கி நின்றது. இன்று காலையில் கடலூரில் காலை 6 மணிமுதல் 7 மணிவரை பலத்த மழை பெய்தது.

இதேபோல் கடலூர் மாவட்டத்தில் பிறபகுதிகளான நெல்லிக்குப்பம், பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி-மின்னலுடன் மழை பெய்தது.

விழுப்புரத்தில் நேற்று இரவு லேசான மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் நேற்று மதியம் மரக்காணம் அருகே நடுக்குப்பத்தில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

அப்போது அதே ஊரைச்சேர்ந்த ஜெயமூர்த்தி மனைவி மஞ்சுளா (வயது 33) என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிரில்களை யெடுக்கும் பணியில் தொழிலாளர்களான செல்வம் மனைவி சலஜா, சுப்புராயலூ மனைவி செல்வி, காத்தவராயன் மனைவி அன்னலட்சுமி ஆகியோருடன் சேர்ந்து ஈடுபட்டிருந்தார்.

அப்போது மின்னல் தாக்கியதில் மஞ்சுளா உள்ளிட்ட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி விவசாயிகள், அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி பீம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக சலஜா ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Similar News