செய்திகள்

ரெட்டியார்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி நகை-பணம் பறிப்பு

Published On 2017-09-28 11:52 GMT   |   Update On 2017-09-28 11:52 GMT
ரெட்டியார்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கழுத்தில் கத்தியை வைத்து நகை- பணத்தை பறித்து சென்ற டிப்ளமோ என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி:

மதகடிப்பட்டு அருகே பள்ளி புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீரையன். தனியார் பஸ் கண்டக்டர். இவரது மனைவி ராஜகுமாரி (வயது 24).

இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரெட்டியார்பாளையம் குண்டு சாலை பகுதியில் உள்ள அரசகுமாரியின் வீட்டுக்கு வந்திருந்தார்.

நேற்று ராஜகுமாரி தங்கை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 3 வாலிபர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் ராஜகுமாரியின் கழுத்தில் கத்தியை வைத்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 3¼ பவுன் செயின் மற்றும் ரூ.4900 ரொக்க பணத்தை பறித்தனர். மேலும் வீட்டில் இருந்த 3 செல் போன்களை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஒடிவிட்டனர்.

இதுகுறித்து ராஜகுமாரி ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜகுமாரியிடம் கத்தியை காட்டி நகை- பணம் மற்றும் செல்போன்களை பறித்து சென்றது அதே பகுதியை சேர்ந்த கவுதமன் (25) மற்றும் பாலாஜி உள்ளிட்ட 3 பேர் என தெரிய வந்தது.

இதையடுத்து நேற்று இரவு அந்த பகுதியில் பதுங்கி இருந்த கவுதமனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் பாலாஜி உள்ளிட்ட 2 பேரை தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட கவுதமன் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்து வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News