செய்திகள்

கொடைக்கானலை கலக்கிய கொள்ளை கும்பல் கைது

Published On 2017-09-28 09:39 GMT   |   Update On 2017-09-28 09:40 GMT
வாகனங்களில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்தது. குறிப்பாக வெளியூர்களில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு கொடைக்கானல் வந்து பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டனர்.

எனவே கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி. செல்வம் உத்தரவின் பேரில் கொடைக்கானல் போலீசார் தலைமையில் தனிப்படை போலீசார் கொடைக்கானல் நகர் பகுதி முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியை சேர்ந்த நவீன்குமார் (25). மோட்டார் சைக்கிளை திருடி வந்தது தெரிய வந்தது.

அவரை கைது செய்து விசாரித்ததில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த அஜித் (22), வத்தலக்குண்டுவை சேர்ந்த ராம்பிரசாத் (23), அணைப்பட்டியை சேர்ந்த குபேரபாண்டி (26), மல்லியம்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் (25), உச்சபட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி (28) ஆகியோருடன் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இவர்கள் திருடிய மோட்டார் சைக்கிளின் முன்புறம் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாத வண்ணம் பல்வேறு பகுதியில் தங்கள் கைவரிசைகளை காட்டியுள்ளதை போலீசார் கண்டு பிடித்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News