வானகரம் வாலிபர் கொலையில் 4 பேர் கைது
போரூர்:
மதுரவாயல் வடக்கு மாதா 2-வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் குணசீலன் (வயது 27). கடந்த 19-ந்தேதி அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடல் வானகரத்தில் சாலையோரம் மூட்டை கட்டி வீசப்பட்டு கிடந்தது.
இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். உதவி கமிஷன் ஜான்சுந்தரம், இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது பழிக்குப்பழியாக குணசீலன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இதுதொடர்பாக திருமங்கலத்தை சேர்ந்த ஹேமந்தகுமார், அண்ணா நகரை சேர்ந்த தமிழரசன், விக்னேஷ், புளியந்தோப்பு டில்லிபாபு ஆகிய பேரை கைது செய்தனர்.
கொலையுண்ட குணசீலன் மீது கடந்த 4.4.2016 அன்று அமைந்தகரையை சேர்ந்த தீபக்ராஜை கொலை செய்த வழக்கு உள்ளது. இந்த கொலைக்கு பழி தீர்க்க குணசீலனை தீர்த்துக்கட்டி இருப்பது தெரிந்தது.
இந்த வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளிகளை மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்கள் சிக்கிய பின்னரே கொலைக்கான காரணம் வேறு ஏதேனும் உள்ளதா என்பது தெரியவரும்.