செய்திகள்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க கீழ்பவானி வாய்க்காலுக்கு உயிர்நீர் திறந்து விட வேண்டும்: ஜி.கே.வாசன்

Published On 2017-08-05 15:45 IST   |   Update On 2017-08-05 15:46:00 IST
பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு உயிர்நீர் திறந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

ஈரோடு:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கட்சி கொடி யேற்று விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று ஈரோட்டிற்கு வந்தார்.

அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-

ஈரோடு மாவட்டத்தில் அனைத்துப் பகுதியிலும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம். குடிநீருக்காகவும், விவசாயத்துக்காகவும் அவர்கள் பவானிசாகர் அணையை நம்பியே உள்ளனர்.

உடனடியாக பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு உயிர்நீர் திறந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை டெங்கு காய்ச்சல் பீதியிலேயே மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

சுகாதாரத்துறை அது போன்ற பகுதிகளுக்கு எல்லாம் நடமாடும் ஆம்புலன்ஸ்களை அனுப்பி தேவையான பாதுகாப்பு நட வடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வுவை பொறுத்த வரை தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதிலிருந்து விலக்கு பெற வேண்டும்.

பிரதமரை சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்.

ஆளுங்கட்சியை பொறுத்த வரை மக்கள் பிரச்சினையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது போய், தங்கள் ஆட்சியையும், அதிகாரத்தையும் காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோடு சாஸ்திரி நகரில் நடந்த கொடியேற்று விழாவுக்கு ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், மாநில பொதுச்செயலாளர் விடியல்சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெசவாளர் அணி மாநில தலைவர் எம். ராஜேஷ், மாநில துணை தலைவர் கிளப்மேலாஞ்ச் எஸ்.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் சிவகிரி, கணபதிபாளையம், சாஸ்திரிநகர், ராஜாஜிபுரம், கனிராவுத்தர்குளம், நசியனூர் உள்ளிட்ட 6 இடங்களில் கட்சியின் கொடியை ஏற்றியும், பெயர் பலகையையும் திறந்து வைத்தார்.

மேலும் காமராஜர் பிறந்த நாளையொட்டி த.மா.கா. சார்பில் நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினார்.

Similar News