செய்திகள்

காட்டுமன்னார்கோவில் அருகே கல்லூரி உதவி பேராசிரியை மாயம்: கடத்தப்பட்டாரா?

Published On 2017-07-09 20:21 IST   |   Update On 2017-07-09 20:21:00 IST
காட்டுமன்னார்கோவில் அருகே கல்லூரி உதவி பேராசிரியை மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காட்டுமன்னார்கோவில்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மழுவத்தேரி பகுதியை சேர்ந்தவர் வீரபாண்டியன், விவசாயி. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு அபிலா (வயது 25) என்ற மகள் உள்ளார்.

அபிலா, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள விடுதியில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் மழுவத்தேரி பகுதியில் உள்ள தனதுவீட்டுக்கு அபிலா வந்தார், விடுமுறை முடிந்ததும் மீண்டும் கல்லூரிக்கு சென்றார்.

அதன் பின்பு அவர் பெற்றோரிடம் செல்போனில் பேசவில்லை. இதனால் கவலையடைந்த பெற்றோர், அபிலாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவரிடம் பேச முடியவில்லை.

சந்தேகமடைந்த அவர்கள் கல்லூரிக்கு சென்றனர். அங்கிருந்த நிர்வாகிகளிடம் எனது மகள் கல்லூரிக்கு வந்தாரா? என்று கேட்டனர். ஆனால் கல்லூரி நிர்வாகம், விடுமுறை முடிந்த பின்னர் அபிலா கல்லூரிக்கு மீண்டும் பணிக்கு வரவில்லை என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அபிலாவை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கும் அவரை காணவில்லை.

இதையடுத்து அவரது தாய் அனிதா காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் உதவி பேராசிரியை அபிலாவை யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது வேறு எங்கும் அவர் சென்றாரா? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி உதவி பேராசிரியை மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News