சீர்காழி அருகே மினிலாரி பனை மரத்தில் மோதி 21 பேர் காயம்
சீர்காழி:
நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள பழையாறு இயற்கை மீன்பிடி துறைமுகம் உள்ளது.
இங்கு புதுப்பட்டினம், கொட்டயம்மேடு, ஓல கொட்டயம்மேடு, தொடுவாய், கூலயார், திருமுலைவாசல் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் மீன் பிடி தொழிலுக்கு செல்வது வழக்கம். அங்கு லட்ச கணக்கில் மீன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை மற்றும் பிறபகுதியில் இருந்து பழையாறு இயற்கை மீன்பிடி தொழிலுக்காக இன்று காலை 6 மணிக்கு மினி லாரியில் 21 பேர் வந்து கொண்டிருந்தனர். வண்டியை பழைய பாலையத்தை சேர்ந்த பாபு ஓட்டினார். மினி லாரி புதுப்பட்டினம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென நிலைதடுமாறி ரோட்டோரத்தில் உள்ள பனை மரத்தில் மோதியது.
இதில் மினிலாரி உருக்குலைந்தது. டிரைவர் பாபுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் வண்டியில் இருந்த சாமி (வயது 50), பாஸ் (55), உத்திராடம் (45), இளையராஜா (40), முத்தையன் (60) உட்பட 21 காயம் அடைந்தனர்.
இதை பார்த்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனே 108 ஆன்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். பின்பு ஆம்புலன்ஸ் உதவியுடன் அவர்களை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாலையில் மினிலாரி பனைமரத்தில் மோதி 21 பேர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.