செய்திகள்

மருத்துவ கலந்தாய்வு நடத்த மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்ப்பு: சென்னையில் 6-ந் தேதி உண்ணாவிரதம்

Published On 2017-07-03 06:40 GMT   |   Update On 2017-07-03 06:40 GMT
ஜனாதிபதிக்கு அனுப்பிய மசோதா என்ன ஆனது? என்று தெரியும் வரை, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வைத் தமிழ்நாடு அரசு நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறுகிறது.
சென்னை:

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை ‘நீட்’ தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறதா? பிளஸ்-2 மார்க் அடிப்படையில் நடக்க உள்ளதா என்ற குழப்பம் நிலவி வரும் நிலையில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அவர் கூறியதாவது:-

பல்லாயிரக்கணக்கான மாணவர் எதிர்காலம் தொடர்பான இரண்டு மசோதாக்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தால் ஒரு மனதாக அனைத்து கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மனுக்கள் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் பரிசீலனையில் உள்ளன. அவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இது மக்களாட்சி மாண்பிற்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது.

மசோதாக்கள் எற்றுக் கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? அவ்வாறு நிராகரிக்கப்பட்டால் அதற்கு என்ன காரணம் என்று தெரியும் வரை, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வைத் தமிழ்நாடு அரசு நடத்தக்கூடாது.

இதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் 6-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும். இப்போராட்டத்தில் ஆசிரியர், மாணவர், பெற்றோர், பல்துறை அறிஞர்கள், கலைஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டு கோரிக்கை முழக்கம் எழுப்ப உள்ளனர்.

இதில் கூடுதலாக அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வில் பொதுப் பட்டியலின் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் வராதவர்களை மட்டும் இடம்பெறச் செய்யும் சூழ்ச்சி நடைபெறுவதாகச் சந்தேகங்கள் எழுந்துள்ளன. குழப்பமான சூழலில் அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றால் அதில் பாதிக்கப்பட்டு தகுதிப்பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்ட இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் இருப்பிடத் தகுதி அடிப்படையில் தமிழ்நாடு பட்டியலில் இடம் பெறுவர்.

இது தமிழ்நாடு பட்டியலை நிச்சயம் பாதிக்கும். இதற்கான விளக்கத்தைத் தமிழ்நாடு அரசு இந்திய அரசிடம் கோரிப்பெறாமல் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தக் கூடாது.

பொது சுகாதாரத்தையும் கல்வியையும் அழித்தொழிக்கவே “நீட்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாநில அரசின் உரிமையைக் காத்திடவும், தமிழ்நாடு மாணவர் நலன் கருதியும், தமிழ்நாடு மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டி ருக்கும் பொது சுகாதாரத் துறையைப் காப்பாற்றிடவும் இந்த போராட்டம் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News