செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் கொ.ம.தே.க. மாநில செயலாளர் ஈஸ்வரன் பேசிய காட்சி.

ஜெயலலிதா இருந்திருந்தால் பெருந்துறையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைந்திருக்கும்: ஈஸ்வரன்

Published On 2017-06-29 10:37 IST   |   Update On 2017-06-29 10:38:00 IST
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பெருந்துறையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைந்திருக்கும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில செயலாளர் ஈஸ்வரன் பேசியுள்ளார்.
பெருந்துறை:

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநில செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. இந்த 5 இடங்களிலும் பெருந்துறை தான் அனைத்து வசதிகளையும் கொண்டது.


இதை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார். அவர் தற்போது உயிரோடு இருந்திருந்தால் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திருக்கும்.

ஆனால் தற்போது அ.தி.மு.க.வில் உள்ள உட்கட்சி பூசலால் எய்ம்ஸ் மருத்துவமனையை எவரும் கண்டு கொள்ளவில்லை.

தி.மு.க. சார்பில் குளம்-குட்டைகளை தூர் வார ஆரம்பித்ததும் அரசின் சார்பிலும் தூர் வாரும் பணி நடந்து வருகிறது. இங்குள்ள மண்ணை இலவசமாக விவசாயிகள் எடுத்துச் செல்ல அரசு அனுமதியளித்தும் ஆளும் கட்சி பிரமுகர்கள் பணம் வாங்கி கொண்டுதான் மணலை எடுத்து செல்ல அனுமதிக்கின்றனர். பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்தே தீருவோம். அதற்காக எந்த விதமான போராட்டத்தையும் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு ஈஸ்வரன் பேசினார்.

Similar News