செய்திகள்

பெருந்துறையில் விபத்தில் வாலிபர் காயம்: இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

Published On 2017-06-28 16:12 IST   |   Update On 2017-06-28 16:12:00 IST
பஸ் விபத்தில் வாலிபர் காயம் அடைந்ததற்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் கருங்கரடு, காந்தி நகர் பகுதியை சேர்ந்த யோகராஜ். இவரது மகன் பிரதீப் (வயது 19).

இவர் கடந்த 2009-ம் வருடம் காஞ்சிக்கோவிலில் இருந்து ஈரோடு செல்வதற்காக தனது பெற்றோருடன் பஸ்சில் சென்றார்.

என்ஜிஜிஓ காலனி பஸ் ஸ்டாப்பில் இறங்கினார். அப்போது பஸ்சை திடீரென எடுத்ததால் பஸ்சில் இருந்து பிரதீப் தவறி விழுந்தார். இதில் அவரது கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடந்த 2013-ம் வருடம் வழங்கப்பட்டது.

அதில் விபத்தில் காயமடைந்த பிரதீப்பிற்கு ரூ. 2.84 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுவரை அந்த இழப்பீட்டுத்தொகை வழங்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த பெருந்துறை சப்-கோர்ட்டு நீதிபதி பகவதியம்மாள் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இதன் பேரில் ஜப்தி செய்யப்பட்ட பஸ் கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டது.

Similar News