செய்திகள்

மரக்காணம் அருகே விபத்து: வாகனம் மோதி 2 பெண்கள் பலி

Published On 2017-05-27 14:11 IST   |   Update On 2017-05-27 14:11:00 IST
மரக்காணம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 பெண்கள் பலியாகினர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆரவள்ளி (வயது 55), சுகந்தி (45). இவர்கள் புதுவைக்கு சென்று மீன்கள் வாங்கி விற்பனை செய்து வந்தனர்.

இன்று அதிகாலை 4 மணிக்கு அவர்கள் மீன்கள் வாங்க புதுவைக்கு செல்ல கிழக்கு கடற்கரை சாலை ரங்கநாதபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் ஆரவள்ளியும், சுகந்தியும் தூக்கி வீசப்பட்டனர்.

ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த 2 பேரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News