செய்திகள்

வங்கியில் ரூ.1.75 லட்சத்துக்கு கவரிங் நகை அடகு வைத்த 2 பெண்கள் கைது

Published On 2017-04-18 15:56 IST   |   Update On 2017-04-18 15:56:00 IST
மேல்விஷாரத்தில் வங்கியில் ரூ.1.75 லட்சத்துக்கு கவரிங் நகை அடகு வைத்த 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:

வேலூர் மாவட்டம், மேல்விஷாரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கியில் கடந்த சில நாட்களுக்கு முன் திருவலத்தை அடுத்த அம்முண்டி பகுதியை சேர்ந்த ரமணி(வயது 36) என்பவர் 23 கிராம் நகைகளை அடமானம் வைத்து ரூ.41 ஆயிரம் பெற்றுள்ளார்.

இதேபோல் இவரது உறவினர் நளினா (37) என்பவரும் 78 கிராம் நகைகளை அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று ரமணி, நளினா இருவரும் மேல்விஷாரத்தில் உள்ள வங்கியின் கிளைக்கு வந்தனர். அப்போது அவர்கள் மீண்டும் வேறு தங்க நகைகளை அடமானம் வைக்க போவதாக கூறினர்.

இதையடுத்து வங்கியில் நகை மதிப்பீட்டாளர் இருவரின் நகைகளை பரிசோதித்து பார்த்தபோது அவை கவரிங் நகைகள் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து நகை மதிப்பீட்டாளர் வங்கி மேலாளரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஏற்கனவே அடமானம் வைத்துள்ள நகைகளையும் பரிசோதித்து பார்த்தபோது அவையும் கவரிங் நகைகள் தான் என்பதும், கவரிங் நகைகளை வைத்து பணம் பெற்று சென்றதும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் கவரிங் நகைகளை அடமானம் வைத்து முறைகேட்டில் ஈடுபட்ட ரமணி, நளினா ஆகிய இருவரையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News