செய்திகள்

வருமான வரி அலுவலகத்தில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆஜர்

Published On 2017-04-13 08:20 GMT   |   Update On 2017-04-13 08:20 GMT
ஆர்கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பான விசாரணைக்காக வருமான வரி அலுவலகத்தில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் இன்று ஆஜரானார்.
சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் கோடிக் கணக்கில் பணப்பட்டுவாடா நடந்ததாக வெளியான தகவலையடுத்து வருமான வரித்துறையினர் கடந்த 7-ந்தேதி அதிரடி சோதனையில் இறங்கினார்கள்.

அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி, முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தினார்கள்.

அங்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் ரூ. 89 கோடி பணப்பட்டுவாடா நடந்திருப்பதாக தகவல் வெளியிட்டனர். இதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அமைச்சர் விஜயபாஸ்கரை வருமான வரி புலனாய்வு துறை அலுவலகத்துக்கு அழைத்து விசாரித்தனர். இதேபோல் சிட்லபாக்கம் ராஜேந்திரன், சரத்குமார் ஆகியோரையும் விசாரணைக்கு அழைத்து இருந்தனர். ஆனால் அன்று சிட்லபாக்கம் ராஜேந்திரனிடம் விசாரணை நடைபெறவில்லை.

நேற்று துணைவேந்தர் கீதாலட்சுமி, ராதிகா சரத்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள்.

இன்று காலையில் சிட்லபாக்கம் ராஜேந்திரனை மீண்டும் ஆஜர் ஆகும்படி வருமானவரித் துறையினர் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலனாய்வு அலுவலகத்தில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் இன்று காலையில் ஆஜரானார்.

அவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினார்கள். ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றியவர்களில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் முக்கிய பங்காற்றினார். எனவே வருமான வரித்துறையினர் சேகரித்துள்ள பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் சிட்லபாக்கம் ராஜேந்திரனிடம் அதிகாரிகள் விசாரணை தொடங்கி இருக்கிறார்கள்.

Similar News