செய்திகள்

பவானி அருகே பனியன் குடோனில் தீ விபத்து: மூதாட்டி கருகி பலி

Published On 2017-03-20 10:57 IST   |   Update On 2017-03-20 10:57:00 IST
பவானி அருகே இன்று அதிகாலையில் பனியன் குடோனில் தீ விபத்தில் மூதாட்டி கருகி பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

பவானி:

பவானி அருகே உள்ள பவளவாய் பேட்டை தபால் நிலைய வீதியை சேர்ந்தவர் குருவாயம்மாள் (வயது 85).

இவர் குடோன் வைத்து நடத்தி வருகிறார். திருப்பூரில் இருந்து பழைய பனியன், வேட்டி போன்ற துணிகளை வாங்கி கால் மிதிமேட் தயாரித்து வியாபாரிகளுக்கு கொடுத்து விற்பனை செய்து வந்தார்.

இவருக்கு 2 மகன்கள் 2 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மாரசாமி என்ற மகன் மட்டும் தாயாருடன் இருந்து வந்தார்.

நேற்று குடோனில் குருவாயம்மாள் படுத்து தூங்கி கொண்டிருந்தார். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை மாரசாமி எழுந்து வெளியே சென்று விட்டார்.

அவர் போன சிறிது நேரத்தில் குடோனில் திடீரென தீப்பிடித்தது. இதில் ஏற்பட்ட புகை மூட்டத்தில் குருவாயம்மாள் சிக்கி மயங்கினார்.

இதில் அவரது உடலிலும் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் குருவாயம்மாள் உடல் கருகி பலியானார்.

குடோனில் தீப்பிடித்து எரிந்ததை கண்ட அந்த பகுதி மக்கள் பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

குடோனில் இருந்த துணிகள் எரிந்து சாம்பலானது. மீதி உள்ள துணிகள் தீ பிடிக்காமல் தீயணைப்பு வீரர்கள் கிளறி விட்டனர்.

இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்று தெரிய வில்லை. மின் கசிவு காரணமாக தீ பிடித்ததா? அல்லது எப்படி தீ பிடித்தது? என்று பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

Similar News