செய்திகள்
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் பிரதீப், அருண்

புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிப்பு

Published On 2017-03-05 10:07 IST   |   Update On 2017-03-05 10:07:00 IST
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 800 பேர், 168 விசைப்படகுகளில் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதில் பிரதீப் (வயது22), அருண் (18), ராமகிருஷ்ணன் (55), சேகர் (48) ஆகிய 4பேர் ஒரு விசைப்படகிலும், சத்தியராஜ்(27), செல்வராஜ்(55), கண்ணன் (40) செல்வம் (35), ரத்தினம் (38) ஆகிய 5பேர் மற்றொரு விசைப்படகிலும் நேற்றிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, 9 மீனவர்களையும் 2 விசைப்படகுகளுடன் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்களை இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துசென்று மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து 9 பேரும் ஊர்க்காவல்துறை நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டதை அறிந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறைப்பிடிக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சிறைபிடிக்கப்பட்ட மீனவர் சத்தியராஜின் குடும்பத்தினர் சோகத்துடன் நிற்கும் காட்சி

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News