செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டம்: தி.மு.க. அரசுக்கு தொடர்பில்லை - மு.க. ஸ்டாலின்

Published On 2017-03-03 14:00 IST   |   Update On 2017-03-03 14:00:00 IST
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதில் தி.மு.க.வுக்கு தொடர்பு இல்லை என்று நெடுவாசல் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு அளித்த மு.க.ஸ்டாலின் கூறினார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம் நடந்து வருகிறது.



முதலில் கிராம மக்கள் மட்டுமே பங்கேற்ற இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்தது. மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்களும் ஆதரவு தெரிவித்தனர். அதே போல் அரசியல் கட்சி தலைவர்களும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்ததோடு நெடுவாசலில் நடைபெற்ற போராட்டத்திலும் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நல கூட்டியக்க தலைவர்கள் திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு பேசினர்.

தி.மு.க.வும் இந்த போராட்டத்திற்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தது. போராட்டத்தில் நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிப்பதற்காக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நெடுவாசல் சென்றார். கிராம எல்லையில் அவருக்கு கிராம மக்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கிராம எல்லையில் இருந்து போராட்டம் நடைபெற்று வரும் நாடியம்மன் கோவில் வரை நடந்தே சென்றார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்ற அவரை போராட்டக்குழுவினர் அழைத்து சென்றனர்.

பின்னர் தரையில் மக்களோடு மக்களாக அமர்ந்து ஆதரவு தெரிவித்தார். போராட்ட நிலவரம் குறித்து அங்குள்ள கிராம மக்களிடம் கேட்டறிந்தார். அப்போது திடீரென மழை பெய்ய தொடங்கியது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மு.க. ஸ்டாலின் அங்கு திரண்டிருந்த மக்களிடம் அவர் பேசியதாவது:-

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மத்திய அரசு நடத்தும் இந்த போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் கட்டுப்பாட்டுடன், எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் வெற்றிபெறும்.



நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டுவதாக இந்த போராட் டம் அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுமக்கள், விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தி.மு.க. ஆதரவு அளிக்காது.

விவசாயிகளுக்காக பல்வேறு சலுகைகள், திட்டங்களை அறிவித்தது கலைஞர் ஆட்சியில்தான். இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தவர் தி.மு.க. தலைவர் கலைஞர்தான். அதே போன்று விவசாயிகளின் ரூ.7 ஆயிரம் கடனை தள்ளுபடி செய்ததும் தி.மு.க. அரசு தான்.

எனவே ஒருபோதும் விவசாயிகளை தி.மு.க. கைவிடாது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரி டெல்லி சென்று பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் மனு கொடுக்க இருந்தேன். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி எம்.பி. ஆகியோர் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுத்தனர்.

ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று பிரதமரை சந்தித்து 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவது குறித்து குறிப்பிடவில்லை. ஆனால் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி தர மாட்டோம் என்று கூறுகிறார்.

தொடர்ந்து இன்று 16-வது நாளாக விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திட்டத்தை கைவிடவேண்டும். தமிழக அரசு இதுதொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதுவரை பொதுமக்கள் நடத்தும் இந்த போராட்டம் தொடரவேண்டும். மக்கள் போராட்டத்திற்கு தி.மு.க. என்றும் துணை நிற்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஹைட்ரோ கார்பன் திட்ட போராட்டத்தை அரசியலாக்க தி.மு.க. விரும்பவில்லை. அதன் மூலம் ஆதாயம் தேடவேண்டிய நிலையும் தி.மு.க.வுக்கு இல்லை.

தமிழகத்தில் மீத்தேன் திட்டம் தொடர்பாக ஆய்வு நடத்துவற்காகத்தான் அப்போதைய தி.மு.க. ஆட்சியில் நான் கையெழுத்திட்டேன். திட்டம் கொண்டு வரப்படுவதற்காக அல்ல. அதேபோல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதில் தி.மு.க.வுக்கு தொடர்பு இல்லை.

இந்த பிரச்சினை தொடர்பாக சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழக முதல்வர் உறுதி அளித்தது போல் மத்திய அரசும் திட்டத்தை கைவிடுவதாக உறுதியளிக்க வேண்டும்.

இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஒட்டுமொத்த கிராமமும் பாதிக்கும். ஆனால் தற்போதைய தமிழக அரசுக்கு அதுபற்றி சிந்திக்க நேரமில்லை. பெங்களூர் சிறைக்கு சென்று சசிகலாவை சந்திப்பதற்கு மட்டுமே நேரம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல் பா.ம.க.வும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நாடியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது கிராம மக்களுடன் சேர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.



இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா, மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா ஆகியோரும் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு அளித்தனர்.

Similar News