செய்திகள்

சிவகாசியில் தீப்பெட்டி ஆலை அதிபர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2017-02-11 04:47 GMT   |   Update On 2017-02-11 04:47 GMT
தீப்பெட்டி ஆலை அதிபர் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி-சாத்தூர் சாலையில் உள்ள பேராபட்டி பகுதியில் வசிப்பவர் ஜவகர் (வயது54). தீப்பெட்டி ஆலை தொழில் அதிபர்.

இவர், குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். சம்பவத்தன்று ஊர் திரும்பிய அவர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதனால் வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்திருப்பது தெரியவர, போலீசாருக்கு ஜவகர் தகவல் கொடுத்தார்.

சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் கொள்ளை போய் இருப்பதாக போலீசாரிடம் ஜவகர் தெரிவித்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

Similar News