செய்திகள்

சிவகங்கையில் குடியரசு தினவிழா: 452 பேருக்கு கலெக்டர் நலத்திட்ட உதவி வழங்கினார்

Published On 2017-01-26 16:08 GMT   |   Update On 2017-01-26 16:08 GMT
சிவகங்கையில் குடியரசு தினவிழாவின் போது 452 பேருக்கு கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடியரசு தினவிழாவையொட்டி இன்று காலை 8.05 மணியளவில் கலெக்டர் மலர்விழி தேசியக்கொடி ஏற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முன்னதாக கலெக்டரை போலீஸ் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியின் போது காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 45 பேருக்கு தமிழக முதல்வரின் பதக்கத்தை கலெக்டர் மலர்விழி வழங்கினார். இதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் 50 பேருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். பின்னர் மூவர்ண பலூன் பறக்கவிடப்பட்டது.

அதன்பிறகு ரூ. ஒரு கோடியே 87 லட்சத்து 470 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 452 பேருக்கு வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் முதன் முறையாக சமூக நலத்துறை சார்பில் 11 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்தினருக்கு ரூ. 7 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது.

பின்னர் சிறப்பாக பணியாற்றிய தாசில்தார்கள் நாகநாதன், செந்தில்வேலு, உமா மனோகரன், லட்சுமி, உமா மகேஸ்வரி, சந்திரபோஸ், கந்தசாமி, செல்வராணி ஆகியோருக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்.

இதேபோல் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, திட்ட அலுவலர் காஞ்சனா, துணை கலெக்டர்கள் மதியழகன், அரவிந்தன், மக்கள் தொடர்புத்துறை அலுவலர் சீதாலட்சுமி, சமூக நலத்துறை அலுவலர் உமையாள் மற்றும் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Similar News