செய்திகள்

கும்பகோணம் - பட்டுக்கோட்டையில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

Published On 2017-01-19 15:26 GMT   |   Update On 2017-01-19 15:26 GMT
கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டையில் குண்டர் சட்டத்தில் 3 பேரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மேலக்காவேரி இ.எஸ்.எம்.பி நகரை சேர்ந்த அப்துல்லா மகன் பஷீர்அகமது (வயது33). மேலக்காவேரி வடக்கு குடியான தெருவை சேர்ந்த ஷேக்அஜீஸ் மகன் ஷேக்நியாஸ் (வயது34). இவர்கள் மீது சுவாமிமலை பகுதியில் கடந்த மார்ச் மாதம் மாணவர் ஒருவரை கொலை செய்ததாக வழக்கு உள்ளது.

இந்த நிலையில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், கலெக்டர் அண்ணாதுரைக்கு பரிந்துரை செய்தார். அதனை பரிசீலனை செய்த கலெக்டர் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சுகுணா, பஷீர்அகமது, ஷேக்நியாஸ் ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சேகர் மகன் மணிகண்டன் (வயது23). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரைக்கு பரிந்துரை செய்தார். அதனை பரிசீலனை செய்த கலெக்டர் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, மணிகண்டனை கைது செய்து திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தார்.

Similar News