4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு: ரெயில் மறியலுக்கு முயன்ற வியாபாரிகள் கைது
நெய்வேலி:
கடலூர்-விருத்தாசலம் மெயின்ரோட்டில் மந்தாரக்குப்பம் உள்ளது. இங்கு 4 வழிச்சாலை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மந்தாரக்குப்பத்தில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டால் அந்த பகுதியில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மந்தாரக்குப்பம் பகுதியில் 4 வழிச்சாலை அமைக்க கூடாது என்று வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கடந்த வாரம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.
அதன்படி இன்று வர்த்தகர்கள் நெய்வேலி வர்த்தக சங்கங்க நிர்வாகிகள் பாபு தலைமையில் திரண்டனர். அவர்கள் காரைக்காலில் இருந்து பெங்களூர் செல்லும் ரெயிலை மறிப்பதற்காக மந்தாரக்குப்பம் ரெயில் நிலையம் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். 200-க் கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.