கடலூரில் கார்-லாரி நேருக்கு நேர் மோதல்: 4 பேர் உடல் நசுங்கி பலி
கடலூர்:
சென்னையில் இருந்து நாகூர் செல்வதற்காக 4 பேர் நேற்று இரவு காரில் புறப்பட்டனர். அந்த கார் இன்று காலை கடலூரை அடுத்த பெரியகங்கனாங்குப்பம் பகுதியில் வந்து கொண் டிருந்தது. அப்போது அதே பகுதியில் கடலூரில் இருந்து புதுவைக்கு சிமெண்டு பாரம் ஏற்றி லாரி சென்றுகொண்டிருந்தது.
எதிர்பாரத விதமாக காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் அந்த கார் லாரியின் அடிப்பகுதிக்குள் சிக்கி முற்றிலுமாக சேத மடைந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 ஆண்கள், ஒரு பெண், ஒரு சிறுவன் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலயே உடல்நசுங்கி பரிதாபமாக பலியானார்கள்.
இந்த விபத்துக்குறித்து தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் லாரியின் இடிபாட்டுக்குள் சிக்கி சேதமடைந்த காரை ஜே.சி.பி.எந்திரத்தின் மூலம் அப்புறப்படுத்தினர். பலியான 4 பேர் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்த விபத்தில் பலியானவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை சேர்ந்த ஜான்முகமது நாச்சியார்(55), ரிபாக்அகமது(11), தன்வீர் மதார்(25), ரகுமான்(28). என்று தெரியவந்தது.
மேலும் இவர்கள் ஜான்முகமது நாச்சியாரின் மகனை வெளி நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்று விட்டு காரில் ஊருக்கு திரும்பியபோது விபத்தில் சிக்கி பலியானது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தால் கடலூர்- புதுவை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.