செய்திகள்

சிதம்பரத்தில் சிவனடியார்கள்-போலீசார் மோதல்

Published On 2016-11-20 23:23 IST   |   Update On 2016-11-20 23:23:00 IST
சிதம்பரத்தில் சிவனடியார்கள்-போலீசார் மோதிக்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் திருக்கூட்டம் ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் தலைமையில் நடராஜர் கோவிலுக்கு 100-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் சிதம்பரத்தில் உள்ள 4 வீதிகள் வழியாக ஊர்வலாக சென்றனர்.

சிதம்பரம் கீழவீதியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் தெற்கு, மேற்கு வீதியை வந்தடைந்தது. அப்போது பாதுகாப்பு பணியில் வந்த ஊர்க்காவல் படையினர் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு வழிவிட்டு செல்லுமாறு ஊர்வலத்தில் சென்றவர்களிடம் கூறினர்.

இதில் ஆத்திரடைந்த சிவனடியார்களில் சிலர் ஊர்க்காவல் படையினருடன் வாக்குவாதம் செய்தனர். இதை பார்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்து சிவனடியார்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து சிவனடியார்களில் சிலர் சாலையின் குறுக்கே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் பேசியதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். ஊர்வலம் வடக்கு வீதி வழியாக கீழ வீதியை அடைந்து கோவிலை சென்றடைந்தது.

சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News