செய்திகள்

மனைவியை எரித்துக்கொன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்

Published On 2016-11-18 16:15 IST   |   Update On 2016-11-18 16:15:00 IST
மனைவியை எரித்துக்கொன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் விதித்து நெல்லை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட் தீர்ப்பளித்தது.
நெல்லை:

நெல்லை மாவட்டம் புளியங்குடி சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 35). இவர் அந்த பகுதியில் உள்ள ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி நிர்மலா (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

ராமசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்தார். மேலும் மதுகுடிக்க பணம் கேட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்தார்.

கடந்த 1.3.2015 அன்று கணவன்-மனைவிக்கு இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராமசாமி மண்எண்ணெயை எடுத்து மனைவி நிர்மலா உடலில் ஊற்றி தீவைத்தார். இதில் நிர்மலா தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் 14 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

நீதிபதி ராஜசேகர் வழக்கை விசாரித்து தீர்ப்பு அளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட ராமசாமிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் சிவலிங்கமுத்து ஆஜரானார்.

Similar News