செய்திகள்

கடலூரில் ஏ.டி.எம். மையங்கள் செயல்படவில்லை: பொதுமக்கள் அவதி

Published On 2016-11-11 22:47 IST   |   Update On 2016-11-11 22:47:00 IST
கடலூரில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம்.மையங்கள் இன்று செயல்பட வில்லை. இதனால் ஏ.டி.எம்.மையங்கள் செயல்பட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். அங்கு கூட்டம் நிரம்பி வழிகிறது.

கடலூர்:

இந்தியா முழுவதும் தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இன்று முதல் செயல்படும் ஏ.டி.எம். மையங்களிலும் பணம் எடுத்து கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனால் ஏராளமான பொதுமக்கள் இன்று ஏ.டி.எம். மையங்கள் முன்பு திரண்டனர். ஆனால் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் செயல்படவில்லை.

கடலூர் மாவட்டத்தில் 192 வங்கிகளும், 500 ஏ.டி.எம். மையங்களும் உள்ளன. கடலூரில் இன்று காலை 10.30 மணி அளவில் மஞ்சக்குப்பம் ஸ்டேட் பாங்கி ஏ.டி.எம்.மையம், செம்மண்டலம் இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையம், திருப்பாதிரிபுலியூர் இந்தி யன் ஓவர்சீஸ்வங்கி ஏ.டி.எம்.மையம், அதே பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம்.மையம், முதுநகர் போலீஸ்நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையம் உள்பட ஒருசில ஏ.டி.எம். மையங்களே செயல்படத் தொடங்கின.

அந்த ஏ.டி.எம். மையங்கள் முன்பு பொது மக்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் அவர்கள் காத்துநின்றனர். ஏ.டி.எம். மையத்தில் 50 ரூபாய் மற்றும் 100 ரூபாய்கள் வந்தன. ஒவ்வொருவரும் பணம் எடுத்து வருவதற்கு ½ மணி நேரம் ஆனது.

கடலூரில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம்.மையங்கள் இன்று செயல்பட வில்லை. இதனால் ஏ.டி.எம்.மையங்கள் செயல்பட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். அங்கு கூட்டம் நிரம்பி வழிகிறது.

ஏ.டி.எம். மையங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் வங்கிகளுக்கு சென்றனர். இதனால் வங்கிகளிலும் கூட்டம் அலை மோதியது.

தபால் அலுவலகத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் கடலூரில் உள்ள தபால் நிலையங்களுக்கு பொதுமக்கள் சென்றனர். இதனால் அங்கு பணத்தை மாற்ற முடியவில்லை.

ரிசர்வ் வங்கியில் இருந்து தங்களுக்கு பணம் வர வில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

Similar News