செய்திகள்

வேப்பூர் அருகே வடமாநில வாலிபர் அடித்துக்கொலை?

Published On 2016-11-07 17:45 IST   |   Update On 2016-11-07 17:45:00 IST
வேப்பூர் அருகே வடமாநில வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்துக்கும் மணிமுக்தாறுக்குமிடையே சாலையோரம் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். அவரது கழுத்து மற்றும் கையில் காயம் காணப்படுகிறது.

இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வாலிபர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே வேப்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பிணமாக கிடந்த வாலிபர் பேண்ட் மற்றும் டி-சர்ட் அணிந்திருந்தார். அந்த வாலிபர் வடமாநில வாலிபராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரது உடலில் காயங்கள் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வாகனங்கள் மோதி இறந்தாரா? என்று தெரியவில்லை. பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும். வாலிபர் சாலையோரம் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News