செய்திகள்

கானாத்தூரில் கல்லூரி பஸ் மோதி காவலாளி பலி: பொதுமக்கள் மறியல்

Published On 2016-10-21 13:02 IST   |   Update On 2016-10-21 13:02:00 IST
கானாத்தூரில் கல்லூரி பஸ் மோதி காவலாளி பலியான சம்பவம் குறித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

திருவான்மியூர்:

நீலாங்கரையை சேர்ந்தவர் வேலு (வயது 50). கானாத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவர் இன்று காலை வேலைக்கு பஸ்சில் சென்றார். கானாத்தூரில் பஸ்சில் இருந்து இறங்கி சாலையை கடந்தார்.

அப்போது வேகமாக வந்த தனியார் கல்லூரி பஸ் காவலாளி வேலு மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

காலை 7 மணிக்கு இந்த விபத்து நடந்தது. ஆனால் 9.30 மணி வரை அங்கு போலீசார் வரவில்லை.

இதை கண்டித்தும், அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க கோரியும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட் டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் கானாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் விரைந்து சென்று பொதுமக்களுடன் சமரசம் பேசினார்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், “இந்த பகுதியில் 6 மாதத்தில் 18 விபத்துகள் நடந்துள்ளன. எனவே இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் வேகத்தடை அமைக்கப்பட வில்லை” என்றனர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக போலீசார் சமரசம் செய்தனர்.

Similar News