செய்திகள்

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்துக்கு கொலை மிரட்டல்: கமி‌ஷனர் ஆபீசில் புகார்

Published On 2016-10-18 08:45 GMT   |   Update On 2016-10-18 08:45 GMT
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் யார் என்பதை கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை எடுக்க கோரி கமி‌ஷனர் ஆபீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அருள்பெத்தையா, சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

டுவிட்டர் பக்கத்தில் ராஜகோபாலன் சுப்ரமன் என்கிற பெயரில் கடந்த 16-ந்தேதி பதிவு ஒன்று போடப்பட்டுள்ளது. அதில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் ப.சிதம்பரத்தையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்வதுதான் சிறந்த வழி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இணையதளத்தில் வெளிப்படையாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த மிரட்டல் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

எனவே மிரட்டல் விடுத்தவர் யார் என்பதை கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ப.சிதம்பரத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Similar News