செய்திகள்

பொள்ளாச்சியில் தண்டவாளத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்த டெய்லர் கொலையா?: போலீசார் விசாரணை

Published On 2016-10-17 13:49 IST   |   Update On 2016-10-17 13:50:00 IST
பொள்ளாச்சியில் தண்டவாளத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்த டெய்லர் கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி முகமது நகரை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற மாரிமுத்து (வயது36). டெய்லர். இவருக்கு காமாட்சி என்ற மனைவியும், நிகிலன் என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டை விட்டு ரமேஷ் வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் இரவு வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் இன்று காலை பொள்ளாச்சி ரெயில் நிலைய தண்டவாளத்தில் ரமேஷ் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து ரமேசின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

பிணமாக கிடந்த ரமேசின் தலையில் வெட்டு காயம் இருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று ரெயில்வே போலீசார் சந்தேகித்து வருகிறார்கள். ரமேசை கொலை செய்தவர்கள் யார்? அவரை வேறு எங்காவது கொன்று விட்டு உடலை தண்டவாளத்தில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பொள்ளாச்சி ரெயில் தண்டவாளத்தில் டெய்லர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News